கடந்த கல்வியாண்டை போலவே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் 30 சதவீதம் குறைப்பு

சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் அனைத்து பாடங்களிலும் 30 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டை போலவே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் 30 சதவீதம் குறைப்பு
Published on

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று கடந்த ஆண்டில் அதிகமாக இருந்ததால், கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் முழு பாடங்களையும் கற்றுக்கொள்ள முடியாது என்பதை கருத்தில் கொண்டும், அவர்களின் சுமையைக் குறைக்கும் வகையிலும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் அனைத்து பாடங்களிலும் 30 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டிலும் நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட பாடத்திட்டங்கள் குறைப்பு (30 சதவீதம்) முறையையே நடப்பு கல்வியாண்டிலும் (2021-22) தொடருவதற்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு, 2 பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கு சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுகள், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்பட இருக்கின்றன.

எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன, ஆசிரியர்கள் எந்த பாடங்களை நடத்த வேண்டும் என்பது உள்பட முழு விவரங்களும் cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதை பள்ளி நிர்வாகங்கள் தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகளை நடத்த சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடங்களின் அடிப்படையிலேயே உள்மதிப்பீடு, பயிற்சி, திட்டங்களை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com