உள்ளூர் பறவைகளின் வலசைப் பயணம் தொடங்கியது - பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

உள்ளூர் பறவைகளின் வலசைப் பயணம் தொடங்கிய நிலையில் கோத்தகிரி பகுதியில் தென்படும் அரிய வகை பறவைகள் தென்பட்டன
உள்ளூர் பறவைகளின் வலசைப் பயணம் தொடங்கியது - பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
Published on

கோத்தகிரி:

கோத்தகிரி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி, அங்குள்ள பழ மரங்களில் சீசன் காரணமாக பழங்கள் காய்த்து குலுங்குவதால் அவற்றை உண்பதற்காகவும், பறவைகள் இனப்பெருக்கம் செய்யத் தேவையான இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதாலும், பல்வேறு விதமான அரிய பறவைகள் கோத்தகிரி பகுதியில் முகாமிட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த உயிர்ச் சூழல் மண்டலமாக உள்ளது. மேலும் மாவட்டத்தின் 62 சதவீதப் பகுதி வனப் பகுதியாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் முக்கிய வலசை பாதையாக உள்ளது. கோத்தகிரியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, லாங் வுட் சோலை ஆகிய பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வலசைப் பயணமாக வந்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

தற்போது சீசன் காரணமாக இந்த பகுதியில் மரங்கள் மற்றும் தாவர வகைகளில் பழங்கள் அதிகமாக காணப்படுவதால் பறவைகளுக்கு ஏற்ற உணவு கிடைக்கிறது. மேலும் இதமான சீதோஷ்ணநிலை, உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காக தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வரத் தொடங்கி உள்ளன.

தற்போது பறவைகளின் உள்ளூர் வலசை துவங்கி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் லாங்வுட் சோலை உள்ளிட்டப் பகுதிகளில் அரிய வகைப்பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த பறவைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து அவற்றைப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

இது குறித்து பறவைகளை ஆவணப்படுத்தி வரும் ஊட்டியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மதிமாறன் தெரிவிக்கையில்,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம் இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் வனப்பகுதியில் பறவைகளுக்கு ஏற்ற பழவகைகள் அதிகமாக உள்ளது.

இந்த பழ வகைகளை உண்ணவும் இனப்பெருக்கத்திற்காகவும் தற்போது சமவெளிப் பகுதியில் இருந்து பறவைகள் உள்ளூர் வலசை தொடங்கியுள்ளது.

இதில் நீலகிரி பிளைகேச்சர், மலபார் விசிலிங் திரஸ், நீலகிரி லாப்பிங் திரஸ், ஒயிட் சீக் பார்பிட், ஒயிட் ஜ, ஆரஞ்சு ஏல்லோ பிளைக்கேச்சர் உள்பட நூற்றுக்கணக்கான அரிய வகைப் பறவையினங்கள் கோத்தகிரி பகுதியில் தற்போது அதிகமாக காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com