

பவானிசாகர்
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த வாரம் பருவ மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயரத் தொடங்கியது.
இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் மழை குறைந்த காரணத்தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 449 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 82.91 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,100 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 867 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையின் நீர்மட்டம் 83.41 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.