

ராமநாதபுரம் அருகே உள்ள குலசேகரக்கால் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 26). கப்பலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும், சித்தார்கோட்டை பாரதிநகர் காலனியை சேர்ந்த நர்சாக பணியாற்றும் நித்யா (23) என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து ராமநாதபுரம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின்னர் நித்யாவுக்கு நவீன்குமார் தொல்லை கொடுத்து வந்ததோடு 50 பவுன் நகையும், ரூ.5 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக வாங்கி வரும் படி கூறி கொடுமைப்படுத்தினாராம். இதற்கு அவரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் குமாரி, தங்கை ஹரிதா ஆகியோர் உடந்தையாக இருந்தார்களாம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நித்யா, ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமார் உள்ளிட்டோரை தேடிவந்தனர். இந்நிலையில் மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மாமனார் கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.