கந்து வட்டி கேட்டு மிரட்டிய காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது

களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை முயற்சி வழக்கில், கந்து வட்டி கேட்டு மிரட்டிய காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கந்து வட்டி கேட்டு மிரட்டிய காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது
Published on

களக்காடு:

களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை முயற்சி வழக்கில், கந்து வட்டி கேட்டு மிரட்டிய காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம் நேரு தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 32), கூலி தொழிலாளி. இவர் தனது குடும்ப செலவுக்காக கடந்த 2017-ம் ஆண்டு கீழதுவரைகுளத்தை சேர்ந்த கணபதியின் மனைவி ராணியிடம் (50) ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் தோறும் ரூ.2,500 வட்டி செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாதம் அவர் வட்டி செலுத்தவில்லை.

உடனே ராணி, இசக்கியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம் (25) வட்டி கேட்டு அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து இசக்கி, ராணியிடம் தட்டிக்கேட்டபோது, அவர் இசக்கியின் மனைவி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

காங்கிரஸ் பிரமுகர் கைது

இந்த நிலையில், கந்து வட்டி கேட்டு மிரட்டி, தனது மனைவி குறித்து அவதூறாக பேசியதால் மனம் உடைந்த இசக்கி நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்தார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தற்கொலை முயற்சி குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ராணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான ராணி காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com