பாலியல் வழக்கு - பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை பயன்படுத்த தடை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஜெயராமனை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கு - பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை பயன்படுத்த தடை
Published on

சென்னை,

பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க கோரியும், 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க கோரியும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி 8 யூடியூப் சேனல்கள் அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகவும், அந்த வீடியோக்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடவும் கோரியிருந்தனர். மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட தடை விதிக்கவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் ஆகியோரை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com