சட்டசபை தேர்தல்: தூத்துக்குடியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் 85 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், 60 உள்ளூர் போலீசார் என மொத்தம் 145 பேர் கலந்து கொண்டனர்.
சட்டசபை தேர்தல்: தூத்துக்குடியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
Published on

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளுக்காகப் பல்வேறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக வெளி மாநிலங்களிலிருந்து துணை ராணுவப் படையினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து எல்லை பாதுகாப்புப் படையினர் (BSF) 85 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர். இவர்களை உள்ளடக்கிய கொடி அணிவகுப்பு நேற்று மாலை தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பிற்கு மாவட்ட எஸ்.பி. மதன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய அணிவகுப்பு, அண்ணா சிலை சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு மற்றும் வி.வி.டி. சிக்னல் சந்திப்பு வழியாகச் சென்று வ.உ.சி. கல்லூரி முன்பு நிறைவடைந்தது.

இந்த அணிவகுப்பில் 85 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும், 60 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 145 பேர் கலந்து கொண்டனர். தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com