சட்டமன்ற தேர்தல்: சென்னையில் 3 நாட்களில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,94,92,820 பறிமுதல்

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.1,94,92,820 பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தல்: சென்னையில் 3 நாட்களில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,94,92,820 பறிமுதல்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு செயல்முறை (Standard Operating Procedure) மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10,000/-த்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50,000/- மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீட்டு குழுவிடம் (Appellate authority) தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.

மேற்படி நிகழ்வுகளை சென்னை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் (FST) என்ற வீதம், 48 பறக்கும் படைகளும் (FST), 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (SST) என்ற வீதம், 48 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் (SST) ஏற்படுத்தப்பட்டு, இக்குழுவினர் மூன்று சுழற்சி முறைகளில் பணிகளை மேற்கொள்வார்கள். இக்குழுக்கள் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில், இன்று (18.03.2026) வாகன சோதைனையின்போது பறக்கும் படை குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,78,120/-, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.2,00,000/-, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,31,600/- மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.4,00,000/-மும், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,23,365/-மும், தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,42,07,855/-ம் என மொத்தம் ரூ.1,52,40,940/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

16.03.2026 அன்று முதல் இன்று (18.03.2026) வரை 3 நாட்களில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் மொத்தம் ரூ.1,94,92,820/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com