

சென்னை,
தமிழக சட்டசபை செயலாளராக இருப்பவர் கி.சீனிவாசன். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை செயலாளராக இருந்த பூபதி பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அதே ஆண்டு சீனிவாசன் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். தமிழக அரசு தற்போது யாருக்கும் பணி நீட்டிப்பு வழங்காத நிலையில் இவருக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்படாது என கருதப்பட்டது.
இந்தநிலையில் சீனிவாசனுக்கு சட்டசபை முதன்மை செயலாளர் என்ற பதவி உயர்வுடன் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள சீனிவாசன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.