சொத்துகுவிப்பு வழக்கு: கணவன்-மனைவிக்கு 5 ஆண்டு சிறை - ரூ.100 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கணவன்-மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கு: கணவன்-மனைவிக்கு 5 ஆண்டு சிறை - ரூ.100 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1989 முதல் 1993 வரை சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஜானகிராமன் பணியாற்றிய காலத்தில் தனது பெயரிலும் மனைவி வசந்தி பெயரிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். அப்போதைய மதிப்பு ரூ.32,25,532 ஆகும். அதாவது வழக்கமான சொத்தை விட 98 சதவீதம் ஆகும்.

இதைத் தொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜானகிராமன் மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை 20 ஆண்டுகளை தாண்டி நடந்து வந்தது. அதன்பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடந்தது.

இந்த நிலையில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகி ராமன்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்தார். அதன்படி முதல் குற்றவாளியான முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன் மற்றும் இரண்டாவது குற்றவாளியான அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

மேலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com