பரமக்குடி அருகே ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டர் கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
பரமக்குடி அருகே ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டர் கைது
Published on

பரமக்குடி,

பரமக்குடியில் சவுடுமண் அள்ள அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த டிரைவரும் சிக்கினார்.

லஞ்சம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி. நயினார்கோவில், போகலூர் ஆகிய பகுதிகளில் சவுடு மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி விவசாயிகள் மண் அள்ளி வருகின்றனர். அள்ளப்படும் மண்ணை சிலர் தனிநபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில் ஒருவர் சவுடுமண் அள்ளுவதற்காக தடையில்லா சான்று அனுமதி வழங்கக்கோரி பரமக்குடி உதவி கலெக்டர் (வருவாய் கோட்டாட்சியர்) சரவண பெருமாளிடம் (வயது 54) விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு அவர் லஞ்சமாக ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

உதவி கலெக்டர் கைது

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து உதவி கலெக்டரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் அந்த நபர் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக்கு சென்று சரவணப்பெருமாளிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சரவணபெருமாளை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பறிமுதல்

பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவி கலெக்டரின் கார் டிரைவரான சுந்தர்(41) என்பவரிடம் விசாரணை நடத்தி, அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட சரவண பெருமாளின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் ஆகும். பரமக்குடியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com