சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் - நடிகை காயத்ரி ரகுராம் பாதுகாப்பு கேட்டு மனு

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகை காயத்ரி ரகுராம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் - நடிகை காயத்ரி ரகுராம் பாதுகாப்பு கேட்டு மனு
Published on

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இந்து கோவில்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும்வகையில், நடிகை காயத்ரி ரகுராம் தொல்.திருமாவளவன் பற்றி சமூக வலைத்தளங்களில் சில கருத்துகளை பதிவிட்டார்.

இதனால் நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். சென்னையில் உள்ள அவரது வீட்டையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் நடிகை காயத்ரி ரகுராம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து செல்போனில் பேசி வருகிறார்கள். இதனால் தனது உயிருக்கும், உடைமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த காயத்ரி ரகுராம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்காமல் சென்று விட்டார். மேலும் அவர், இன்று (புதன்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுப்பதாக தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com