

சென்னை,
தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஆண்களும், பெண்களும் நவநாகரிக ஆடைகளை உடுத்தி வந்து தரிசனம் செய்து வந்தனர். குறிப்பாக பெண்கள் இறுக்கமான ஆடையான லெகின்ஸ் மற்றும் ஆண்கள் டீ-சர்ட் போன்றவற்றை அணிந்து வந்ததால், 2016-ல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, வேட்டி, சேலை, சல்வார், சுடிதார் போன்ற பாரம்பரிய ஆடைகளை அணிந்தே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இவை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நவநாகரிக உடைகளான லெகின்ஸ், டீ-சர்ட் போன்றவற்றை தவிர்த்து பாரம்பரிய ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை அனைத்து கோவில்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.