பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன திருட்டு வாலிபர் கைது

பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன திருட்டில் ஈடுபட்ட லாரிபர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன திருட்டு வாலிபர் கைது
Published on

திருவாலங்காடு ஒன்றியம் கோதண்டராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கங்கா (வயது 43). கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி திருத்தணி மா.பொ.சி சாலையில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் தனது வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை சரிபார்க்க சென்ற கங்கா, அங்கிருந்த அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து வங்கி இருப்புத் தொகையை பார்க்குமாறு கூறினார்.

அந்த நபர் கங்காவிடம் உங்களது ஏ.டி.எம். கார்டு வேலை செய்யவில்லை எனக்கூறி வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்தார்.

பின்னர் கங்காவின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அந்த மர்ம நபர் ரூ.15 ஆயிரத்தை எடுத்தார். உடனே கங்காவின் செல்போனுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டதாக தகவல் சென்றது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கங்கா சம்பவம் குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் பணம் திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 25) என்பவரை போலீசார் கங்காவிடம் பணம் திருடிய வழக்கில் கைது செய்து அவரிடமிருந்து ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஏழுமலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதே ஏ.டி.எம். மையத்தில் மூன்று பேரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.85 ஆயிரம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com