விவசாயி கோபால்சாமி மீது தாக்குதல் : கிராம நிர்வாக அதிகாரி- உதவியாளருக்கு ஜாமீன்

விவசாயி கோபால்சாமியை தாக்கிய சம்பவத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விவசாயி கோபால்சாமி மீது தாக்குதல் : கிராம நிர்வாக அதிகாரி- உதவியாளருக்கு ஜாமீன்
Published on

கோவை

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் கடந்த 6ம் தேதி விவசாயி கோபால்சாமி தனக்கு சொந்தமான நிலத்தின் ஆவணம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகம் சென்ற போது, கிராம நிர்வாக அலுவலருக்கும் கோபால்சாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கினார்

பின்னர் சிறிது நேரத்தில் கோபால்சாமியின் காலில் விழுந்து முத்துசாமி மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து, காட்சிகளை எடிட் செய்து தனித்தனியாக வெளியிட்டார். முதலில் விவசாயி கோபால் சுவாமியின் காலில் கிராம உதவியாளர் முத்துச்சாமி விழும் காட்சிகள் மட்டும் வெளியானது.

இதன் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் சில தினங்களில் மற்றொரு வீடியோ காட்சி வெளியானது. அதில் கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயியை ஆபாசமாக திட்டியபடி தாக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் உண்மைத் தகவலை மறைத்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தனர்.

மேலும் விவசாயி கோபால்சாமி கொடுத்த புகாரின் பேரில் கிராம உதவியாளர் முத்துச்சாமி மீதும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மீதும் ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இது போல ஒட்டர்பாளையத்தில் நடந்த சம்பவங்களை செல்போனில் பதிவு செய்து, அவற்றை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி பதற்றத்தை ஏற்படுத்திய நபர் மீதும் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் அன்னூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com