மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் - நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு வழங்க இயலாத திமுக அரசு பொதுமக்களை எப்படி பாதுகாக்கும் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து தலைமுடியைப் பிடித்து இழுத்து நெஞ்சில் மிதித்து மணல் கடத்தல்காரர்கள் தாக்கியதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தனது பணியைத் தயங்காது நேர்மையுடன் ஆற்றிய அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதுடன், இதற்கு மேலும் கடத்தலைத் தடுக்க முயற்சித்தால் வண்டியை ஏற்றிக் கொலை செய்துவிடுவதாக மணல் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது இம்மியளவும் இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

சட்டவிரோத மணல் கடத்தலைக் குறித்து புகார் அளித்தவர்களையும், அதைத் தடுக்கும் அதிகாரிகளையும் தாக்கும் சம்பவம் இது ஒன்றும் முதல்முறை அல்ல. அதிலும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், "திமுக ஆட்சி அமைந்ததும் மணல் அள்ளலாம்" என அச்சாரமிட்டதை ஒப்பிட்டுப் பார்த்தால் தொடர்ந்து மணல் கடத்தல் மாபியாக்களுக்கு திராவிட மாடல் அரசே ஒத்துழைப்பு நல்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

குற்றவாளிகளிடமிருந்து அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு வழங்க இயலாத இந்த திமுக அரசு எளிய பின்புலம் கொண்ட பொதுமக்களை எப்படி பாதுகாக்கும்? சுற்றுச்சூழலை எப்படிக் காக்கும்? இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு "நாடு போற்றும் நாலாண்டு" என்று நாகூசாது மக்கள் வரிப்பணத்தில் நாலாபக்கமும் விளம்பர நாடகம் போடுவது வெட்கக்கேடு! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com