இந்தி தெரியாததால் தமிழக மீனவர்களை தாக்குவதா? இந்திய கடற்படைக்கு வைகோ கண்டனம்

இந்தி தெரியாததால் தமிழக மீனவர்களை தாக்குவதா? என்று இந்திய கடற்படைக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தி தெரியாததால் தமிழக மீனவர்களை தாக்குவதா? இந்திய கடற்படைக்கு வைகோ கண்டனம்
Published on

சென்னை,

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகை மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளில் இருந்து சுதீர், செல்வகுமார், செல்லதுரை, சுரேஷ், விக்னேஸ்வரன், மகேந்திரன், பாரத், பிரசாந்த், மோகன்ராஜ், வீரவேல் ஆகிய 10 பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் கடந்த அக்டோபர் 21-ந் தேதியன்று இரவு 3 மணிக்கு ஜெகதாம்பட்டினத்துக்கு கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் படகை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது.

இலங்கை கடற்படைதான் நம்மை தாக்குகிறது என்று நினைத்துள்ளனர். ஆனால், இந்தியில் பேச சொல்லி தாக்கியதன் மூலம், தாக்கியவர்கள் இந்திய கடற்படையை சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது. மீனவர்கள் சென்ற படகில் இந்திய தேசியக்கொடி கட்டப்பட்டு இருந்ததை பார்த்த பின்பும், துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கண்டனம்

கடற்படை கப்பலில் இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்தி மொழியில் பேசியதற்கு, மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர். இதில் கோபமுற்ற இந்திய கடற்படையினர் இந்தி மொழியில் பதில் சொல்லுமாறு மீனவர்களை தாக்கியுள்ளனர். மீனவர்களை தரையில் அமரச்சொல்லி காலணி காலால், அவர்கள் மீது ஏறி நின்றும், கைகளை பின்னால் கட்டி மண்டியிடச்செய்தும், இரும்பு கம்பியால் அடித்தும் சித்ரவதை செய்துள்ளனர். அவர்களுக்குள்ளே இந்தியில் பேசிக்கொண்டு, இவர்களை பார்த்து ஏளனமாக சிரிப்பதும், ஷூ காலால் எட்டி உதைப்பதுமாக நடந்துள்ளனர்.

பின்னர் அனைவரின் ஆதார் கார்டுகளையும் வாங்கி பார்த்துவிட்டு, 'உங்களுக்கு இந்தி தெரியாதா?' என்று கூறி இழிவான வார்த்தைகளால் மீனவர்களை திட்டியுள்ளனர். இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை எட்டி உதைத்து, காலால் மிதித்து ஏளனமாக நகைத்திருப்பது தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கடற்படையின் இந்த செயல் மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். நியாயப்படுத்தவே முடியாத கடும் கண்டனத்துக்குரியது.

மன்னிப்பு கேட்கவேண்டும்

இந்தி மொழி தெரியாததால் தமிழ்நாட்டு மீனவர்களை இழிவுப்படுத்தி தாக்கிய இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மத்திய அரசு தமிழக மீனவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com