

சென்னை,
தமிழ் மொழியின் மாண்பினை இழிவுபடுத்திய நிதியமைச்சர் மரியவில்சனுக்கு இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் நா.மரிய வில்சன் அவர்கள் வெளிப்படுத்திய கோபமும், அதனுடன் இணைந்த மதச்சார்புடைய கருத்துக்களும் மாநிலத்தின் அரசியல் பண்பாட்டிற்கே அவமானமாக ஆகும்.
பட்ஜெட் விவாதத்தின் போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தமிழ் ஆர்வலர் என்ற முறையில் எழுப்பப்பட்ட நியாயமான விமர்சனமே. ஆனால் அதற்கு பதிலளித்த அமைச்சர், "நான் பிறப்பால் கிறிஸ்தவன். எனக்கு கிறிஸ்தவம் அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழியை கற்றுக்கொடுத்திருக்கிறது என பேசியிருக்கிறார்.
கிறிஸ்துவ மொழி அன்பு கருணை இரக்கம் சொல்லித் தந்தது என்றால், தமிழ் மொழி எதுவும் சொல்லித் தரவில்லை என்பதே பொருளாக அமையும். சனாதன தர்மமும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வழிமுறைகளை போதிக்கிறது. ஒவ்வொரு மதமும் அன்பை, இரக்கத்தை, பொறுமையை வலியுறுத்துகிறது. ஆனால் தன் மதம் மட்டும் தான் இவற்றை கற்றுக்கொடுத்தது என்ற உணர்வை உருவாக்குவது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பதை உலகே அறியும். கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்னாலேயே தமிழ் மொழி தோன்றியது. தான் சார்ந்த கிறிஸ்தவ மதத்தை உயர்த்திப் பிடிக்கிறேன் என்ற நோக்கில் தமிழ் மொழியை சிறுமைப்படுத்தி இருக்கிறார் அமைச்சர் மரிய வில்சன்.
எனக்கு தமிழ் சரியாக வராது அதை பேச முயற்சிக்கிறேன் எனும் பொருள்படும்படி பேசி இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து அமைச்சர் என்பதே அவையில் மறந்து காட்டுக்கூச்சல் போட்டிருக்கிறார்.
சட்டசபை கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கையை கொண்டு வரும் பொழுது ஜெபமாலையை கொண்டு வந்தார். அது மத நம்பிக்கை என்பதாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் தமிழில் பிழை இல்லாமல் பேசுங்கள் என சட்டமன்ற உறுப்பினர் கூற உடனடியாக கிறிஸ்துவத்தை அவர் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றி கேள்வி எழுகிறது.
இதிகாசங்களும், காப்பியங்களும், தேவாரமும், திருவாசகமும், திருவருட்பாவும், திருவெம்பாவையும் இன்னும் பல இலக்கியங்கள் பக்தியை உள்ளடக்கியது தமிழ் மொழி. தமிழ்மொழி தெரியாத ஒரு தலைமுறை உருவாகி வந்துள்ளது தான் திராவிட அரசியல் ஆட்சி செய்ததன் சாதனை எனும் வேதனை என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் மொழியின் அருமை தெரியாமல் நிதியமைச்சர் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது என்று கூறியது மட்டுமல்லாமல், தனது பேச்சு நடையை யாருக்காகவும் மாற்ற மாட்டேன் என்று ஆவேசமாக அறிவித்ததோடு, சபை மாண்பு என்பதே சிறிதும் இன்றி ஒலிபெருக்கியை தள்ளி விடுவது அவர் ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சரின் பொறுப்புக்கு அழகல்ல.
சபாநாயகரே அவரை அமைதிப்படுத்த வேண்டிய நிலை உருவானது. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பதவி வகிப்பவர். தமிழை இழிவுபடுத்தி தனது மதத்தை உயர்த்திப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கல்வித்துறையில் 25 முதல் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்று அவரே கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பழக்கப்பட்டவர் என்பதால் தமிழில் சில பிழைகள் ஏற்படலாம். ஆனால் அதை ஒப்புக்கொண்டு சரி செய்ய முயற்சி செய்வதற்குப் பதிலாக, தமிழ் படித்தவர்களுக்கே அன்பு தெரியாது என்று சொல்வது ஆணவத்தின் உச்சம்.
மேலும், சொத்து தகராறில் தனது சொந்த அண்ணன் குடும்பத்தினரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், "அன்பு மொழி" பற்றி பேசுவது இரட்டை வேடமாகவே தென்படுகிறது.
சட்டப்பேரவை என்பது அனைத்து மக்களின் பிரதிநிதித்துவ அரங்கம். அங்கு மதத்தை முன்னிறுத்தி தமிழை இழிவுபடுத்துவது மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தானது. நிதியமைச்சர் பதவி என்பது பொறுப்பானது. கோபத்தைக் கட்டுப்படுத்தி, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதே அந்தப் பதவிக்கு அழகு. தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மதிக்கும் மனப்பான்மையை அமைச்சர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் விவாதங்களை மதரீதியாக மாற்றி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்.
தமிழுக்காக எதையும் செய்வோம், தமிழ் எங்கள் உயிர் எனவெல்லாம் போலி அறிக்கைகளை விடும் தி.மு.கவினரும், போலி தமிழ் ஆர்வலர்களும் அமைச்சரின் இந்த பேச்சுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காததன் காரணம் சிறுபான்மை கிறிஸ்துவ தாஜா அரசியல் தான். இதனை உணர்ந்துதான் யாரும் எதிர்த்து குரல் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே உரையில் கிறிஸ்துவத்தை இடைச்செருகலாக அமைச்சர் கொண்டு வந்தாரோ என மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
உலகம் போற்றும் தமிழ் மொழியை குறைத்து மதிப்பிட்டதற்காக நிதி அமைச்சர் மரியவில்சன் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இனிமேல் இது போன்று ஆணவ பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.