

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே நேற்று முன்தினம் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக 5 பேர் கொண்ட கும்பல் பட்டாசு வெடித்தது.
இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான் (வயது 55) அவர்களிடம் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் பட்டாசு வெடிக்குமாறும், அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் எச்சரித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் மீது சரமாரி தாக்குதல்
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் திடீரென பட்டாசை கொளுத்தி சப்-இன்ஸ்பெக்டர் மீது வீசினார். இதில் சுதாரித்துக்கொண்ட டார்ஜான் சற்று விலகி கொண்டதோடு, பட்டாசை வீசிய நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்ல முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற 4 பேரும் டார்ஜானை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடி விட்டா.
4 பேர் கைது
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அரகண்டநல்லூரைச் சேர்ந்த ஆகாஷ்(19), விக்னேஷ்(27), சோமு (35), வள்ளலார் கோவில் ஷாநவாஸ் ஆகியோர் என்பதும், தப்பி ஓடியது ஹரிதரன்(25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஆகாஷ், விக்னேஷ், சோமு, ஷாநவாஸ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஹரிதரனை வலைவீசி தேடி வருகிறார்கள்.