ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயற்சி; தடுக்க முயன்ற தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்

கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் வருவாய் ஆய்வாளரை தாக்கி விட்டு, பெண் அதிகாரி உள்பட மூவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயற்சி; தடுக்க முயன்ற தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை வழியாக கேரளாவுக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாகனத்தை குமரி மாவட்ட உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு பறக்கும் படை அதிகாரிகள் பின்னால் துரத்தி சென்றனர். களியக்காவிளை வழியாக கேரளாவுக்குள் நுழைந்த மினி லாரி, இஞ்சிவிளை பகுதியில் உள்ள தனியார் அரிசி குடோனுக்குள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடனடியாக குடோன் கதவை மூடி உள்ளனர்.

அவர்களை பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து பின்னால் துரத்தி சென்றபோது, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தமிழக அதிகாரிகள் குழுவில் இருந்த வருவாய் ஆய்வாளரை தாக்கி விட்டு, பெண் அதிகாரி உள்பட மூவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்பு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இதையடுத்து தமிழக அதிகாரிகள் குழுவினர் உடனடியாக இது குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கேரள வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள மற்றும் தமிழ்நாடு போலீசார், குடோனில் இருந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் நடத்தி வரும் அலீம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு பறக்கும் படை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவான கடத்தல் கும்பலை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com