

திருநெல்வேலி,
கடந்த ஆண்டில் (2025) திருநெல்வேலி மாவட்டம் பாளையம்செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 35) என்பவரது இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்த வழக்கில் நேற்று திருநெல்வேலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (எண்-III) தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினை குற்றவியல் நடுவர் ஜெயசங்கரகுமாரி வழங்கினார்.
நீதிமன்றத்தில் வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கில் சம்பந்தப்பட்ட மருதூர் பகுதியைச் சேர்ந்த துரை(28) மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பைக்கை திருட முயற்சி செய்த குற்றத்தை, திருடிய குற்றத்திற்கு சமமாக கருதி பிரிவு 303(2)-ன்படி 6 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் பத்மாவதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் வனிதா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சியங்களை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.