தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி
Published on

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டை காலி செய்ய மறுப்பு

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு பெண் தனது உடல் மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக ஓடி சென்று அவருடைய தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்பது தெரியவந்தது. தனது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், தனக்கு சொந்தமான வீட்டில் கடந்த பல ஆண்டுகளாக குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய மறுப்பதாகவும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

பரபரப்பு

இதேபோல் புலிக்கரை அருகே சவுலூர் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது தனக்கு வழங்கப்பட்ட 3 சென்ட் நிலத்தில் வீடு கட்டுவதை சிலர் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த நிலத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது. இதனால் மனவேதனை அடைந்து தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். மேற்கண்ட 2 பேரின் தீக்குளிப்பு முயற்சி சம்பவங்களால் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com