ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? - ஐகோர்ட்டு கேள்வி

டாஸ்மாக் வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.
ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? - ஐகோர்ட்டு கேள்வி
Published on

சென்னை,

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டுச் செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் ஜாமின் கோரி 2-வது முறையாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மனுதாரரை ஏற்கெனவே, 4 நாள்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர், ஆனால், எதுவும் பறிமுதல் செய்யவில்லை. எனவே, ஜாமின் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பேரம் பேசி எம்.எல்.ஏ.-வை விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் மனுதாரர் சிறையில் இருந்து வருகிறார். ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, காவல்துறை தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com