

சென்னை,
தமிழக அரசு மொத்தம் ரூபாய் 3000 கோடி மதிப்பில் 4 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1000 கோடி, 6 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1000 கோடி மற்றும் 7.09 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2035 ரூபாய் 1,000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஆகஸ்ட் 26-ந்தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஆகஸ்ட் 26-ந்தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.