தற்கொலைக்கு முன் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா பேசிய உருக்கமான ஆடியோ வெளியீடு

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, கடைசியாக பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
தற்கொலைக்கு முன் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா பேசிய உருக்கமான ஆடியோ வெளியீடு
Published on

மதுரை,

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதிஸ்ரீ துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி(நாளை) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் அவர், தற்கொலை முடிவை தானாகவே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் குறை கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

ஒருவேளை நீட் தேர்வில் தோல்வி அடைந்து தனக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? என்ற பயம் காரணமாக இந்த முடிவை தான் எடுத்ததாக ஜோதிஸ்ரீ கூறியிருக்கிறார். மேலும் தனது தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், இந்த முடிவை எடுத்ததற்காக தனது தாய், தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த ஆடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன், அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com