பிளஸ்-1 மாணவி, தாயாருக்கு அரிவாள் வெட்டு: ஆட்டோ டிரைவர் கைது

சாத்தான்குளம், பூச்சிக்காடு விலக்கு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கும், பிளஸ்-1 மாணவிக்கும் இடையே இருந்து வந்த சில பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
பிளஸ்-1 மாணவி, தாயாருக்கு அரிவாள் வெட்டு: ஆட்டோ டிரைவர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி ஞானமலர் (வயது 45). இவர்களது மகள் மரிய ஜெபராணி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 பயின்று வருகிறார். குடும்பப் பிரச்சினை காரணமாக ஞானமலர் தனது கணவரைப் பிரிந்து, மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதற்கிடையில், பூச்சிக்காடு விலக்கு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் லிங்கதுரை(65) என்பவருக்கும், மாணவி மரிய ஜெபராணிக்கும் இடையே ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞானமலரும் அவரது மகள் மரியஜெபராணியும் வெளியூர் செல்வதற்காகப் பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளனர். பூச்சிக்காடு விலக்கு பகுதியில் அவர்கள் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அங்கு ஆட்டோவுடன் நின்றிருந்த லிங்கதுரையிடம், "ஏன் என் மகளுடன் தகராறு செய்கிறீர்கள்?" என ஞானமலர் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லிங்கதுரை, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஞானமலர் மற்றும் மரிய ஜெபராணி ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு, தனது ஆட்டோவிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை மாவட்டம், திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 2 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இசக்கித்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவைர் லிங்கதுரையை போலீசார் கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com