தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: 23-ந்தேதி மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம்

தமிழகத்தில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.45-ம், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20-ம் என்று நிர்ணயம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வு: 23-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்.
Published on

சென்னை,

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு தொடர்பாக வரும் 23-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

23-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்

தமிழகத்தில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு 2013-ம் ஆண்டு 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25-ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ.12-ம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. புதிய கட்டணம் நிர்ணயம் குறித்து, அனைத்து மாவட்டங்களிலும், நுகர்வோர் அமைப்புகளுடன் கருத்து கேட்பு கூட்டம், வரும் 23-ந் தேதி நடத்த வேண்டும் என, கலெக்டர்களுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

குறைந்தபட்ச கட்டணமாக ரூ.45 நிர்ணயம்

தமிழக முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் சடகோபன் கூறியதாவது:

ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வருவதால், இனியும் தாமதம் இன்றி, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.45 நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20 வரை வசூலிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும் 'டிஜிட்டல் மீட்டர்' மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com