

சென்னை,
தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றது. விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடியின் அயப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்படிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அந்த வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் அந்த வீட்டில் இருந்த 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.