அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2-வது சுற்று நிறைவு: 7 காளைகளை அடக்கி பிரகாஷ் என்பவர் முதலிடம்

முதல் சுற்றில் 100 மாடுகள் களம் கண்ட நிலையில், 11 மாடுகள் மட்டுமே பிடிபட்டுள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2-வது சுற்று நிறைவு: 7 காளைகளை அடக்கி பிரகாஷ் என்பவர் முதலிடம்
Published on

மதுரை,

ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்தில் நடக்கும். அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் உலக அளவில் சிறப்பு பெற்றவை.

அதன்படி பொங்கல் பண்டிகை தினமான இன்று (15-ந் தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 1,100 காளைகளும், சுமார் 600 வீரர்களும் களத்தில் உள்ளனர்.

வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளின் திமிலை காளையர்கள் அடக்கி வருகின்றனர். முதல் பரிசாக வீரருக்கு காரும்,காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் சுற்றில் 100 மாடுகள் களம் கண்ட நிலையில், 11 மாடுகள் மட்டுமே பிடிபட்டுள்ளன. 11 வீரர்கள் தலா ஒரு மாட்டை பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது 2-வது சுற்று நிறைவு பெற்றுள்ளது. இதில் மொத்தம் 200 மாடுகள் களம் சென்ற நிலையில், 34 மாடுகள் பிடிப்பட்டன. 7 காளைகளை அடக்கி சோழவந்தானைச் சேர்ந்த பிரகாஷ் முதலிடத்தில் உள்ளார். 3 காளைகளை அடக்கி சாப்டூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் 2-வது இடத்திலும், அதைபோல 3 காளைகளை அடக்கி உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துபாண்டி என்பவர் 3-வது இடத்திலும் உள்ளார்.

அனுப்பானடி (100) 2 மாடுகளும், சூர்யா, தேனூர் (89) 2 மாடுகளும் பிடித்துள்ளனர். 3-வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றதில் 245 காளைகளில் 19 காளைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com