

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறாக, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் (Express Avenue Mall) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திடீர் குழு நடனம் (Flashmob) மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நடனம் நேற்று (28.03.2026) நடைபெற்றது.
இந்த நடனக் குழுவினர் “எனது வாக்கு எனது உரிமை” எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல, “உங்கள் ஓட்டு உங்கள் குரல்” ஏப்ரல் 23 வாக்களிப்போம், 100% வாக்களிப்போம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நடனம் ஆடினர்.
இந்த நடனக் குழுவினருடன் பொதுமக்களும் ஆர்வமுடன் இணைந்து நடனம் ஆடி வாக்குப்பதிவு நாளன்று வாக்களிப்பதாக உறுதியளித்தனர். இந்த கலை நிகழ்ச்சிகளை ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
பின்னர், தேர்தல் தொடர்பான வினாடி வினா கேள்வி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்கப்பட்டு அதற்கான விடை தெரிவிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.