

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அமிதாப் சவுத்ரி மற்றும் வங்கி உயர் அலுவலர்கள் சந்தித்து பேசினார்கள்.
இதேபோல், ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் முகமது ரேலா, முதல்-அமைச்சர் விஜயை சந்தித்து பேசினார். அப்போது, ரேலா மருத்துவமனையின் செயல் இயக்குநர் ஜி.ரமேஷ் கிருஷ்ணன், தலைமைச் செயல்பாட்டு அலுவலர் முகமது பாரூக் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மேலும், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கோபால் கிருஷ்ணன், செயலாளர் எஸ்.சுகுமார், துணைத் தலைவர் கே.ஜி.பிருத்வி மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் விஜயை சந்தித்து பேசினார்கள். அதோடு, தென் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரனும் முதல்-அமைச்சர் விஜயை சந்தித்து பேசினார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.