ஆயுதபூஜை தொடர் விடுமுறை; 6.92 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
சென்னை,
நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இதேபோல, மாநிலம் முழுவதும் ஆயுத பூஜைக்கான பொருட்களை வாங்க லட்சக்கணக்கான மக்கள் கடைவீதிகளில் திரண்டனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சென்னையில் இருந்து நேற்று இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
விடுமுறையொட்டி, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இவற்றின் வாயிலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இவ்வாறு அரசுப் பேருந்துகள், ரெயில்கள், ஆம்னி பேருந்துகள் உள்ளிட்டவை மூலம் 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்தநிலையில், ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. செப்.26 முதல் 30 வரை 13,303 பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகளில் 6,91,757 பயணிகள் பயணித்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.






