ஆயுதபூஜை: வாகன நெரிசலை தவிர்க்க சென்னையில் போக்குவரத்து மாற்றம் - போலீசார் முக்கிய அறிவிப்பு

முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தாம்பரம் போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.
சென்னை,
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தாம்பரம் போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆயதபூஜை விடுமுறையையொட்டி கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்லும் வாகனங்களின் நெரிசலை தவிர்க்க நாளை (செவ்வாய்க்கிழமை) பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக தாம்பரம் மாநகர போலீஸ், பெருநகர சென்னை போலீஸ் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனரகத்துடன் இணைந்து முக்கிய போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி கனரக வாகனங்கள் நாளை மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி சந்திப்புகளில் இருந்து எல்லை மாவட்டங்கள் நோக்கிச் செல்லுமாறு வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள்
சென்னை மற்றும் ஆவடி பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பூந்தமல்லியிலிருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சீபுரம்-திருவண்ணாமலை-திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம் ஜி.எஸ்.டி. சாைல நோக்கி வரும் கனரக வாகனங்கள் மதுரவாயலில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சீபுரம்-திருவண்ணாமலை-திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி.சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
காஞ்சீபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஓரகடம் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் -திருவண்ணாமலை- திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வண்டலூர் வெளிவட்ட சாலை
5-10-2025 பிற்பகல் 2 மணி முதல் 6-10-2025 மாலை 4 மணி வரை செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு -காஞ்சீபுரம் சாலை, வாலாஜாபாத்-காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
சிங்கப்பெருமாள்கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பிவிடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
இரும்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனடியாக கனரக வாகனங்கள் வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
பயணிகளுக்கான வசதி
ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், |திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தலாம்.
எனவே வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசாருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






