ஆயுதபூஜை; சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள்

ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ஆயுதபூஜை; சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள்
Published on

சென்னை,

ஆயுதபூஜை வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. மறுநாள் விஜயதசமி வருகிறது. அதன்பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமம் இன்றி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசின் போக்குவரத்துத்துறை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகிற ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு 12 மற்றும் 13-ந்தேதிகளில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னை கோயம்பேடு, தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் புறப்படும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இயக்கப்பட்ட அட்டவணையின்படி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பஸ்நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு செல்லும் பஸ்கள், புதுச்சேரி, கடலூர், மற்றும் சிதம்பரம் வழி (ஈ.சி.ஆர்.) பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

பயணிகள் இந்த பஸ் சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ் நிலையங்களுக்கு இணைப்பு பஸ்கள் மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com