அணை பகுதியில் மயங்கி கிடந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 3 வயது ஆண் குட்டி யானை மயங்கி கிடந்தது.
அணை பகுதியில் மயங்கி கிடந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உடலில் காயங்களுடன் சுமார் 3 வயது ஆண் குட்டி யானை மயங்கி கிடந்தது. இதைப்பார்த்த வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையின் உடல்நிலை குறித்து அதிகாரிகளுக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் கால்நடை உதவி மருத்துவர் சதாசிவம் காயம் அடைந்த குட்டி யானையின் உடலில் இருந்த காயங்களுக்கு மருந்து போட்டு சிகிச்சை அளித்தார். இதைத்தொடர்ந்து மருத்துவர் மற்றும் வனத்துறையினர் குட்டி யானையின் உடல்நிலை குறித்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குட்டி யானை உடல்நலம் தேறிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தது. இதையடுத்து குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

குட்டி யானையின் உடலில் காயங்கள் இருந்ததால் வேறு ஏதாவது விலங்குகள் குட்டியானையை தாக்கியதா? என்று பிரேத பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பிறகே தெரியவரும் என்று கால்நடை மருத்துவர் தெரிவித்தார். அதன்பின்னர் குட்டி யானையின் முகத்தில் இருந்த சுமார் 1 அடி நீளமுள்ள 2 தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. பின்னர் வனப்பகுதியில் குட்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com