மேட்டுப்பாளையம் அருகே தாயை பிரிந்து அலையும் குட்டி யானை

சாலையின் ஓரங்களில் தாயை தேடி தவிப்புடன் குட்டி யானை சுற்றி வருகிறது.
மேட்டுப்பாளையம் அருகே தாயை பிரிந்து அலையும் குட்டி யானை
Published on

கோயம்புத்தூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள சிறுமுகை – லிங்காபுரம் வனப்பகுதியில், பிறந்து சில மாதங்களேயான குட்டி யானை ஒன்று, தாய் யானையிடம் இருந்து பிரிந்து வனப்பகுதி சாலையோரம் சுற்றித் திரிந்து வருகிறது.

லிங்காபுரம் – காந்தையூர் செல்லும் சாலையின் ஓரங்களில் தாயை தேடி தவிப்புடன் இந்த குட்டி யானை சுற்றி வருகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு அருகில் பயமின்றி சென்று விளையாட முயற்சிக்கிறது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மனவேதனையுடன் பரிதாபப்படுகின்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை மீட்டு அதனை தாய் யானையுடன் மீண்டும் சேர்க்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

யானைக் கூட்டம் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தாய் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்து குட்டியை பாதுகாப்பாக சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குட்டி யானை தாயுடன் விரைவில் இணைந்தால் தான் நிம்மதி என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வனத்துறையின் முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com