

புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸிலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பரசி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.இந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அன்பரசியின் உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றது.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அன்பரசிக்கு பிரசவ வலி கடுமையானது. எனவே ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு, அவசர கால மருத்துவ உதவியாளர் ரமேஷ் மற்றும் ஓட்டுநர் சதீஷ்குமார் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்தனர். இதில் அன்பரசிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
முதலுதவி சிகிச்சைகளுக்குப் பிறகு தாயும் குழந்தையும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பத்திரமாக அனுமதிக்கப்பட்டனர். தற்பொழுது இருவரும் நலமாக உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உரிய நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.