முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..!

முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்துள்ளார்.
முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..!
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு கும்கி யானைகள், சவாரிக்கு பயன்படும் யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் மற்றும் குட்டி யானைகள் உள்ளிட்ட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் ஒரு பாகன் மற்றும் உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தெப்பக்காடு முகாமில் மசினி என்ற யானையை பாகன் சி.எம். பாலன் என்பவர் பராமரித்து வந்துள்ளனர். இன்று காலை வழக்கம் போல் மசினி யானைக்கு உணவளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென்று பாகான் சி.எம். பாலனை யானை பலமாக தாக்கியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த பாகனை உடன் பணியாற்றியவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாகன் பாலன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மசினி யானை ஏற்கனவே 2019-ல் சமயபுரம் கோவியிலில் இருந்தபோது பாகனை தாக்கி கொன்றதால், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரபட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com