டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு
Published on

சென்னை,

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கின் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர், ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுவிற்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரினார்.

மனுதாரர் தரப்பில், குதிரைபேர வழக்கில் ஜாமீன் பெற்று விடுதலையான நாளில், இந்த வழக்கில் கைது செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com