பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

கடையநல்லூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகை

கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது. அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுகை நடத்தினர். இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். 6.30 மணியளவில் மாநில செயலாளர் செங்கை பைசல் தலைமை தாங்கி பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுன் கிளை தலைவர் அப்துல் ஜப்பார், தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

வாழ்த்து தெரிவித்தனர்

இதேபோன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் தாஹா, ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துர் ரஹ்மான் பிர்தவுசி, மக்காநகர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி, தவ்ஹீத் நகர் முஜாஹித் பாத்திமா நகர் பள்ளி திடலில் அபூதல்ஹா இக்பால் நகர் ரய்யான் திடலில் ரய்யான்மைதீன், மஹ்மூதாநகர் ரபீக் ராஜா மதினா நகர் பள்ளி திடலில் அப்துல் அஜீஸ் என நகரில் 9 இடங்களில் நடை பெற்றது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் கங்கா மேற்பார்வையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

தொழுகைக்கு பின்பு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com