

திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாக இருப்பதுடன், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முருகனுக்கு உகந்த நாளாக இருப்பதால், இந்த இரண்டு நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் 2 நாட்கள் தடை விதித்துள்ளது. இடவசதியை கருத்தில் கொண்டு, கார்கள் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைக்கோவில் நுழைவுப் பகுதியிலிருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் இலவசமாக கோவில் பஸ்களில் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.