

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக கோவிலுக்குள் பத்ரகாளியம்மன் சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதி, முருகப்பெருமானின் திருமணக்கோலம் கொண்ட சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளில் நெய் விளக்கு ஏற்றி வழிப்பட்டு வருகிறார்கள்.
இதற்காக கோவிலுக்குள் கோவில் நிர்வாகத்தின் கீழ் நெய் விளக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை பெரும்பாலான பக்தர்கள் காசு கொடுத்து வாங்கி தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். சில பக்தர்கள் வெளியில் கடைகளில் விற்கக்கூடிய நெய் அகல் விளக்கை வாங்கி வந்தும் தீபம் ஏற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கோவில் வாசல் முன்பு சில இடங்களில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதில் 'பக்தர்கள் வெளியில் இருந்து கொண்டுவரும் விளக்குகளை கோவிலுக்குள் ஏற்றுவதை தவிர்க்கவும். இப்படிக்கு கோவில் நிர்வாகம்' என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.