சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் நட தடை

15 நாட்களுக்கு கோவிலில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள சிதம்பரம் சார்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் நட தடை
Published on

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகளிடம் இக்கோவிலில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இங்குள்ள கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நடுவதற்கு தடை விதித்து சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் 15 நாட்களுக்கு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவை ஏற்று கொடிமரம் நடும் நிகழ்வை அறநிலையத்துறை அதிகாரிகள் கைவிட்டனர். இதனால் காவல்துறையினர் உள்பட அனைவரும் கோவிலில் இருந்து வெளியேறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com