

தூத்துக்குடி,
அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யும் உரக்கடைகளுக்கு உடனடியாக 'விற்பனை தடை' விதிக்கப்படும் என தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாரத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உரக்கடைகளில், தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது உரங்களின் இருப்பு நிலை மற்றும் விற்பனை விலைக் குறிப்புகளைக் கேட்டறிந்த அதிகாரி, உரங்களை விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யும் உரக்கடைகளுக்கு உடனடியாக 'விற்பனைத் தடை' விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் பூச்சி மருந்துகள் மற்றும் உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் பூச்சி மருந்துகள் மற்றும் இயற்கை உரங்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்து, இதுகுறித்துத் தொடர்ந்து கண்காணிக்க வட்டார உர ஆய்வாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
யூரியா உரத்தினை விவசாயிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனைத்துத் தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.