திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுக்க தடை: மீறுவோர் மீது வழக்குப்பதிவு


திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுக்க தடை: மீறுவோர் மீது வழக்குப்பதிவு
x

திருச்செந்தூர் கோவிலுக்குள் புகைப்படம் எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களால் பக்தி முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. குறிப்பாக கோவில் திருவிழா காலங்கள், சுப முகூர்த்த தினங்கள், விடுமுறை நாள்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் கோவிலுக்குள் புகைப்படம் எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது, டிரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது போன்ற செயல்களும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பக்தி முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, கோவில் உள்ளே செல்போன் கொண்டு செல்லவும், பயன்படுத்துவும் தடை விதிக்கப்பட்டு வெளியிலேயே செல்போன் பாதுகாப்பு மையமும் அமைக்கப்பட்டது. எனினும் சிலர் மறைத்துவைத்து கைப்பேசியை உள்ளே கொண்டு சென்று படம் எடுத்து வெளியிடுவது தொடர்ந்தது.

இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், கோவில் வளாகத்தில் டிரோன் பறக்கவும், செல்போன் மூலம் ரீல்ஸ் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அவற்றைப் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய அறிவுப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

1 More update

Next Story