

சென்னை,
பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்யமாட்டோம் என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்து உள்ளதாக படத்துடன் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
செய்தியின் படத்தில் இடம் குறிப்பிடப்படாததால் தமிழ்நாட்டில் நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறாகப் பகிரப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.