விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
Published on

எடப்பாடி:-

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கதவணை நீர்த்தேக்க பகுதியில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே, இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையிலான விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இதனை இரு மாவட்டங்களையும் சேர்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் பூலாம்பட்டி கதவணை பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 1-ந் தேதி முதல், பூலாம்பட்டியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்தை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.இதனால் கடந்த, 16 நாட்களுக்கு பிறகு பூலாம்பட்டி பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று முதல் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

கதவணையில் நீரோட்டம் கூடுதலாக இருந்து வரும் நிலையில் விசைப்படகில் மிக குறைவான பயணிகளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பூலாம்பட்டி காவிரி கதவணைப்பகுதியில் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கிய நிலையில், நீண்ட தொலைவு பயணம் செய்து மறுகரைக்கு சென்று வந்த மக்கள் தற்போது மகிழ்ச்சியுடன் இந்த விசைப்படகு போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com