பழனி முருகன் கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் - பக்தர்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைப்பு

பேட்டரி காருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் அறுபவை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதையில் கோர்ட்டு உத்தரவுப்படி இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் விஞ்ச் நிலையம், ரோப் கார், படிப்பாதை வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்கள் எளிதாக சென்றுவர கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வரை 34 பேட்டரி கார்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், 35-வது வாகனமாக ரூ.20 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் சார்பில் பழனி முருகன் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி காருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.






