

சென்னை,
தங்கத்தை போல் வெள்ளியையும் அடகுவைத்து பணம் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. விலை அதிகரித்தாலும் வெள்ளி விற்பனையும் கூடியுள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்தி, வெள்ளி விற்பனையில் மோசடியும் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 31 சதவீதம் பேர் இவ்வாறு ஏமாற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் 1-ந் தேதி முதல் வெள்ளி நகைகளுக்கு தன்னார்வ ஹால்மார்க் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. வெள்ளி வாங்குபவர்களும் பி.ஐ.எஸ். கேர் செயலி வாயிலாக பொருளின் தூய்மை, ஹால்மார்க் செய்யப்பட்ட தேதி, சோதனை மையம் உள்ளிட்ட விபரங்களையும் சரிபார்த்துக்கொள்ளலாம்.
ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளில் வெள்ளி வாங்கியவர்களில் 31 சதவீதம் பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக, லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவன ஆய்வு அறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வில் வெள்ளி வாங்கிய 19,148 பேரில், 23 சதவீதம் பேர், நகை கடைகள் அல்லது இணையதளங்கள் வாயிலாக ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
கிட்டத்தட்ட 8 சதவீதம் பேர் ஒருமுறை மோசடியில் சிக்கியதாக கூறியுள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 93 சதவீதம் பேர், வெள்ளி பொருட்களுக்கு ஹால் மார்க் செய்யும் முறையை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.