

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தருவைகுளம்-வெள்ளப்பட்டி கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை வழியாக பீடி இலைகள் கடத்தபடுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் மேற்சொன்ன இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தருவைகுளம்-வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட பாலத்திற்கு கீழ் 6-ம் தேதி இரவு இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 9 மூட்டைகளில் இருந்த பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் தெரியாத வாகனத்தில் தப்பி ஓடி விட்டனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அந்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.